ஞாயிறு, 29 ஜனவரி, 2012

போலித்தனமே வாழ்க்கையாகிவிட்டதா?


உன்னைப் பற்றிப் பெருமைப்படு!

அன்புள்ள தம்பு!



அமைச்சரவையில் இருந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். நல்ல வெள்ளை ஆடை; வெள்ளைப் பல். கை குலுக்கினார். பிறகு விரல்கள், எனது கைவிரல் மோதிரங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டேன்.

காரணம் அவர் மீது 43 குற்றங்கள் இருக்கின்றன. ஒரு கொலை செய்த குற்றம் உள்பட.

இப்படிப்பட்ட மனிதர்கள் உலா வருகிறார்கள் பொது வாழ்வில். நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை.

வேலை வாங்கித்தர நேரடியாக பணம் லஞ்சமாகக் கேட்டவர்; பல்கலைக்கழகம் என்ற பெயரில் படிப்பு சொல்லித்தர பல லட்சங்கள் வாங்குபவர்; காட்டில் மரங்களை வெட்டி பணம் சம்பாதிப்பவர் – இவர்களெல்லாம் காரில் வருகிறார்கள் கல்யாண வீட்டிற்கு! அவர்களுக்கு மரியாதை; முதல் வரிசையில் முதலிடம் உட்கார, காலில் விழுகிறார்கள் மணமக்கள்!

இவர் சாராயம் விற்று குடியைக் கெடுத்தவர்; அதுவும் கள்ளச்சாராயம். இவரைக்கேட்டு அரசில் பெரிய பதவிகள் அளிக்கப்படுகின்றன.
எப்படி இப்படிப்பட்ட ஊழல் மனிதர்களெல்லாம் பெரிய மனிதர்களாக மேடை ஏறுகிறார்கள்? உலகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது?

நாம் எல்லோரும் ஒரு பொய் விளையாட்டு விளையாடுகிறோம். அவன் திருடன் என்று தெரிகிறது. இருந்தாலும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கை குலுக்குகிறோம்.

பெரிய மனிதர்களை வளைத்துப்போட்டு விபச்சார வாழ்க்கை நடத்தும் ‘ஊரைக்கெடுத்த உத்தமி என்று தெரிகிறது இருந்தாலும் கழுத்திலுள்ள நகைகளையும் பட்டுப்புடவையையும் பார்த்து புன்னகையுடன் கைகூப்பி வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறோம்.

இப்படி போலித்தனமே வாழ்க்கையாகிவிட்டது. ஊர்மக்கள் போலி நாடகம் ஆடுகிறார்கள். விவஸ்தை கெட்டவர்கள்.

உனக்கும் இப்படி குறுக்கு வழியில் சம்பாத்தித்தால் என்ன என்று தோன்றுகிறது! ஆசை அடிக்கடி எழுகிறது. மறந்தும் போலி வாழ்க்கை நடத்தாதே! நீ அசல். ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா.

அவர்களுக்கெல்லாம் அவர்கள் சந்ததிகளுக்கெல்லாம் காலம் என்ன வைத்திருக்கிறது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.

ஏனெனில், இவ்வுலகில் சத்தியம், நேர்மை, சமத்துவம், சுதந்திரம் என்று சில விஷயங்கள் மாறா உண்மைகள்! அவற்றுடன் விளையாடுபவர்கள் அதற்கு ஒரு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் இப் பிரபஞ்சம் ஒரு நெறிமுறையில்தான் இயங்குகிறது. அந்த நெறிமுறைதான் சத்தியம், நேர்மை, அகிம்சை.

நீ ஒரு அசல்!
அசலாக வாழ்ந்துவிடு;
உன்னைப் பற்றிப் பெருமைப்படு.
நேர் வழியில் நில். நேர் வழியில் செல்.
சபலம் உன்னைத் தொடாமல் பார்த்துக்கொள்.

டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி.


திங்கள், 23 ஜனவரி, 2012

காதலெனும் அரும்பை...


அன்பே!
காதலெனும் அரும்பை
மலர்வதற்குள் பறித்தேனா?
உன் மனதை உடைத்துவிட்டேனா?
மனந்திறந்து மன்னிப்பு கேட்கிறேன்


மலர் கொடுத்தேன்
சூடிக்கொண்டாய் – என்
மனதைக் கொடுத்தேன்
தீயிலிட்டாய்!

பூ பூக்கலாம் உதிரலாம்
உதிர்ந்த்தடி என் நெஞ்சம்
கண்ணீரைச் சிந்தி
கரைத்துவிட்டாய் என் மனதை


ஆறுதல் சொல்வேன் அரவணைப்பேன்
ஆனால்
என்னவென்று சொல்வேன்
எது தடுக்கிறதென் நெஞ்சை?


மண்ணின் தாகத்தைத்
தீர்த்திடலாம் மேகம்!
பெண்ணே! உன் தாகத்தைத்
தீர்த்திடுமோ என் மோகம்?


நம் உறவு ஆரம்பித்தது எங்கே?
முடியப்போவது எங்கே?
பார்க்க முடியாத தூரத்தில்
நாம் இருந்தாலும்
பாவையுன் மீது நாளும் ஞாபகம்


நல்ல பதில் வருமென்று
நாளும் நான் காத்திருப்பேன்!?


இந்தக் கவிதை என் நண்பன் தாண்டவமூர்த்தி 12.12.1989 அன்று எனக்கெழுதிய கடிதத்தில் எழுதியது.


அடிக்-கடி கடிதம் எழுது. நீ பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரை, விமர்சனங்களை எனக்கு காட்டவே இல்லை. எனக்கும் ஞாபகம் இல்லை. இன்னும் பல எழுதிவை. அடுத்தமுறை படித்துக் கொள்கிறேன். (எப்போது?)


இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும்போது உனது முதல் கடிதம் எனக்கு வரும். அதன்பின்பு மறுபடியும் ஏதாவது கிறுக்கி எழுதுவேன். அதுவரை விடைபெறுவது,
உன் நண்பன்,
தாண்டவமூர்த்தி.


மறக்க முடியாத நினைவுகளுடன்,

புதன், 18 ஜனவரி, 2012

'ஆடாமல் ஆடுகிறேன்' ... ஜெயலலிதா


"ஆயிரத்தில் ஒருவன்" - மறக்க முடியாத சினிமா


4) 'ஆடாமல் ஆடுகிறேன்'

கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டயடி சத்தம், அதைத்தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

"
ஆடாமல் ஆடுகிறேன்... பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா...வா...வா....
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா...வா...வா.... வா....வா...வா......"


முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, 'ஆண்டவனைத் தேடுகிறேன்' என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக த்பேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

"
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்"

'
கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்' என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

(
மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).

5) '
நாணமோ... இன்னும் நாணமோ..'

நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன..?. காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா?. அதுதான் இந்தப்பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்துகொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

"
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது.. அது எது?

ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது.. அது இது"

பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்னைக்கவரும் வண்ணம் இருக்கும்.

6) '
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்'

அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

"
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை"


இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

நாகேஷின் நகைச்சுவை

இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் "என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?"

நாகேஷ்: "அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ''ன்னு சிரிச்சா. 'கொன்னுடுவேன்' அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்".

'
ஆயிரத்தில் ஒருவன்' திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

'
ஆயிரத்தில் ஒருவன்' பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

இந்த விமர்சனம் மையம் (THE HUB) என்ற இணையப் பக்கத்திலிருந்தும், எண்ணங்கள் எழுத்துக்கள் சாரதா அவர்களின் திரியிலிருந்தும் எடுக்கப்பட்டது.


ஆயிரத்தில் ஒருவன் - நிச்சயம் தமிழ்ப் பட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படமாகும். பழைய Pirates of the Carribean Sea படத்தின் காட்சியமைப்புகள் நினைவு படுத்தினாலும் தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்புற்று விளங்கியது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பும் முக்கியமான காரணம். எம்.ஜி.ஆர். அவர்களின் தோற்றமும், நீங்கள் குறிப்பிட்ட காட்சியமைப்புகளும் நடன அமைப்பும் ஒளிப்பதிவும் என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் ஆயிரத்தில் ஒருவன். 



செவ்வாய், 17 ஜனவரி, 2012

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை!


ஆயிரத்தில் ஒருவன் - மறக்க முடியாத சினிமா


பாடல்களும் இசையும் 

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அதுவரை தமிழ்த்திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குத்தான்.
அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ்சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகி விட்ட ஒன்று

இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி..பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்களில் ஆயிரத்தில் ஒருவன் கண்டிப்பாக இருக்கும். காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.

1)
பருவம் எனது பாடல்

நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

"
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்

கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்"

பல்லவியைபாடிமுடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ‘HUMMING’ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ்ஸ்தாயி வரையில் கொண்டுவர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

"
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்"

என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை. 



2) '
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை'

வழக்கம்போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

"
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே"

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.

3) '
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ'

இந்தப் பாடலைப்பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப்பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப்பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

4) '
உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்'

பி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க் கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.

"
பொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்
க‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்
உள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்"

அடுத்து வ‌ரும் இசை 'பிட்'டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கருப்பு நிற உடையில் அழகுப்பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி)

(தொடரும்....)


இதே படத்தின் இன்னொரு விமர்சனம் நம்ம ஊரு கடையம் என்ற வலைப்பக்கத்தில்...

சனி, 14 ஜனவரி, 2012

ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர்.


தமிழ்த் திரைப்படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. எத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று கணக்கே இல்லை. பிடித்துப் போனதற்கு காரணங்களே சொல்லமுடியாது. எம்.ஜி.ஆரைப் பிடிக்கும் அதனால பாரத்தேன் அப்படின்னும் சொல்ல முடியாது. திரையரங்குகள் தவிர்த்து, வீடியோ கேசட், மற்றும் தோலைக்காட்சிகளில் பார்த்தவைகளும் கணக்கிலடங்கா!

சில படங்கள் ஒருமுறைக்கு மேல் பார்க்கவே முடியாது. ஆனால் சில படங்களை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது. அத்தகைய படம்தான் இந்த ஆயிரத்தில் ஒருவன். தமிழ்ப்படங்களில் புராணப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன.

ஆனால் இதுவரையாகட்டும், கடற்கொள்ளையர்களை கதைக் கருவாகக்கொண்டு வெளிவந்த ஒரே படம் 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக்களங்கள் என ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

இப்படத்தின் கதாநாயனான 'மக்கள் திலகம்' எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கைதேர்ந்த தையற்கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவதுபோல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சணடைக்காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம். இன்றைக்கும் கூட ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதுவரை (பானுமதிக்குப்பின்) சரோஜாதேவிதான் எல்லாப்படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக)போட்டிருந்தார்கள். ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

'
பருவம் எனது பாடல்' என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மணடபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.


எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம்போல "வெற்றி... வெற்றி..." என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித்தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும்போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக்கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக்காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக 'கடற்கொள்ளையனாக' சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப்போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்... இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டுமப்டியாக இருக்கும்.

கத்திச்சண்டைக்காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (MGR & ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச்சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப்பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள்சண்டை (நம்பியார்: "இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் த்லைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்"), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர்.(வழக்கம்போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப்போகும் மூன்று கத்திச்சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித்தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

(தொடரும்...)