வியாழன், 26 ஏப்ரல், 2012

நண்பர்கள் மட்டுமே ஆறுதல்!


GOD IS LOVE

Hello Brother,

உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் போட தாமதம் ஆனதில் மன்னிக்கவும். கடவுள் அருளால் நான் நல்லபடியாக உள்ளேன். என் மகளும் நல்லபடியாக உள்ளாள். எல்லா வாரமும் ஒருமுறை அவளுடன் ஃபோனில் பேசுவேன். மற்றபடி என் கணவர் இதுவரை லெட்டர் போடவில்லை. காரணம் ஏன் தெரியுமா? இந்த முறை வந்து அவருக்கு பணம் ஏதும் அனுப்பிக் கொடுக்கவில்லை, அதனால்தான்.


உங்கள் லெட்டர் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். காரணம் என்னுடைய சூழ்நிலைகளை எல்லாம் அறிந்துகொண்டு மனப்பூர்வமாக பதில் அனுப்பி உள்ளீர்களே அதை நினைத்துதான். நீங்கள் எழுதிய அனைத்து விஷயங்களும் சிந்திக்கக்கூடிய விஷயங்கள்தான். காரணம் என் திருமணம் முடிந்து வருகின்ற ஜூன் 7 ம் தேதியோடு 14 வருடங்கள் முடிகின்றது. ஆனால் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்த காலம் வெறும் 5 வருடம் மட்டும்தான். அப்புறம் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அன்றைய தினத்திலிருந்து என் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. ஏன் காதலித்து திருமணம் செய்தேன் என்று இப்போது நினைக்கிறேன்.

நீங்கள் எழுதினீர்கள், ஏன் இன்னொரு துணைவரைத் தேடக்கூடாது என்று! உண்மையிலேயே எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை நினைக்கும்போது, இனி எனக்கு ஒரு துணை வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். என் மகளுக்காக மட்டும் இந்த உலகத்தில் வாழ வேண்டும், அவளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட மாதிரி அவளும் படக்கூடாது. 


நான் வாழ வேண்டிய வயதில் சரியாக வாழவில்லை. இனி எனக்க்கென்று யார் வாழ்வு கொடுக்க வருவார்கள்? பெண்களைப் பற்றி எழுதினீர்கள், தியாகிகள் என்று. அந்த தியாகத்தைக் கடைபிடித்துக் கொண்டுதான் இவ்வளவு நாட்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பெண்களால் அப்படி வாழ முடியும். ஆனால் ஏனோ ஆண்கள் அப்படிப்பட்ட பெண்களுக்கு துரோகம் செய்து விடுகிறார்கள். என் வயது சரியாக 32. இனியும் யார் என்னைத் திருமணம் செய்து கொள்வார்கள்? 

என்மேல் பாசமுள்ள கணவராக இருந்திருந்தால், இரண்டு வருடம் பொறுத்து வந்த என்னை ஏமாற்றி இருக்க மாட்டாரே! அவருக்கு தாம்பத்திய சுகம் கொடுக்க ஆள் இருந்திருக்கும். அதனால்தான் என்னை அவர் அலட்சியப்படுத்தினார். என்னைப் பொருத்தவரை அந்த சந்தோஷத்தைவிட உண்மையான அன்பு பாசத்தைத்தான் எதிர்பார்க்கிறேன். செக்ஸ் இல்லாமல் என்னால் எத்தனை வருடம் வேண்டுமானாலும் வாழ முடியும். காரணம் நான் அனுபவித்த வேதனைகள் அவ்வளவு. பல வருடத் தனிமையினால் பழகிவிட்டேன்.

நான் இப்படி எழுதிவிட்டேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். நீங்கள் வெளிப்படையாக எழுதினது போலவே, நானும் என் மனதில் உள்ளதை எழுதுகிறேன். என்னைப் பொருத்தவரை இனி என் கணவருடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளமாட்டேன். வெளி உலகத்துக்கு வேண்டுமானால், கணவன் மனைவியாக வாழ்வேனே தவிர இனி எந்த உறவும் இருக்காது. காரணம் என் மகளுக்கு தந்தை என்று சொல்ல ஒரு ஆள் வேண்டும் அல்லவா?

நான் போனமுறை அவரிடம் கேட்டதற்கு, ‘உன்னை வாழவும் விடமாட்டேன், சாகவும் விடமாட்டேன் என்று சொன்னார். அதாவது என்னை சந்தோஷமாக வைத்து குடும்பம் நடத்தமாட்டாராம். இந்த அர்தத்தில் இப்படிப் பேசினார். என்னை இந்த அளவிற்கு துன்பப் படுத்துவதற்கு நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எந்த துரோகமும் செய்யவில்லை. அவர் முழுமையாக தவறு செய்துவிட்டார் என்று தெரியும். அதே போல நானும் தவறு செய்திருப்பேனா என்ற சந்தேகம்தான்.

அதனால்தான் ஃபிரண்ட்ஸ் என்று பேசினாலே வீணாகக் கோபப்படுவார். ஒருமுறை சபாபதி சார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரை ரொம்பவும் இன்சல்ட் பண்ணிவிட்டார். இந்த மாதிரி சுபாவம் திருமணம் ஆன புதிதில் இல்லை. என் மேல் அன்பாகவும் பாசமாகவும் இருந்த அவரை யார் தான் இப்படி மாற்றினார்களோ அந்த கடவுளுக்குத்தான் தெரியும். 

வார்த்தைகளாலே என் மனதை அதிகமாய் வேதனைப் படுத்தி உள்ளார்.
உண்மையிலேயே அவர் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தேன். ஆனால் என் பாசத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இப்பொழுது அவர் இல்லை. என் வீட்டில் உள்ளவர்கள் எத்தனையோ தடவை அவரை விவாகரத்து செய் என்று சொன்ன நேரங்கள் உண்டு. நான் தான் காதலித்து திருமணம் செய்துகொண்டேனே, நாளை இப்படி ஒரு சூழ்நிலை வந்துவிட்டால் ஊர் உலகம் என்ன பேசுவார்கள் என்று யோசித்தேன். அதனால்தான் இன்னும் வேதனைகளை அனுபவித்து வருகிறேன்.

எத்தனையோ கிலோமீட்டருக்கு அப்பால் நான் உள்ளேன். சொந்தங்கள், அம்மா, அண்ணன்கள், அக்கா எல்லோரும் இருந்தும் ஒரு அனாதை போலவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உண்மையிலேயே என்னை ஆறுதல்படுத்த உங்களைப் போன்ற நண்பர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மொத்தத்தில் நண்பர்கள்தான் இப்போது சொந்தங்களைப் போல! மற்றபடி 
கவிதா வீட்டிற்கு வந்த பொழுதே உங்களுக்கு என் கணவரைப் பற்றித் தெரிந்திருக்கக்கூடும்.

அவருடைய சுபாவத்தினால்தான் சென்னை வந்த சமயம் கூட அவருக்கு தெரிவிக்காமல் வந்தேன். தெரிவித்திருந்தால் உங்களையோ, சபாபதி சாரையோ யாரையுமே பார்த்திருக்க முடியாது.
நான் இந்த தடவை வந்து நான்கு மாதம் முடியப்போகிறது. இதுவரை ஒரு லெட்டர் கூட எனக்கு என் வீட்டிலிருந்தோ, என் கணவரிடமிருந்தோ எனக்கு வரவில்லை. உண்மையிலேயே உங்கள் நட்பு கிடைத்ததற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன். 

இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போதே (இன்று) கவிதாவின் லெட்டர் வந்தது. எனக்கென்று நீங்களும் கவிதாவும்தான் கடிதம் எழுதுகிறீர்கள். வேறு யாருடைய கடிதமும் எனக்கு வந்ததில்லை. மற்றபடி எழுதிக்கொண்டே போனால் நிறைய எழுதலாம்...

இனி, உங்களுடைய விஷயத்திற்கு வருகிறேன். உங்கள் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் நலம்தானே! நான் ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லுங்கள். உங்களுக்கு ஏதேனும் இன்டர்வியூ வந்ததா? அந்த ஜெகன்நாதனைப் போய் மீண்டும் பார்த்தீர்களா? என்ன சொன்னார்.

மற்றபடி இதில் ஒரு பேப்பரில் கவிதாவிற்கும் எழுதியுள்ளேன். கவிதாவின் முகவரியையும் எழுதுகிறேன். சிரமம் பாராமல் அவளுக்குப் போஸ்ட் செய்யுங்கள். மறக்காமல் எனக்காக இந்த உதவியைச் செய்யவும். இனியுள்ள விஷயங்களை அடுத்த மடலில் எழுதுகிறேன். 

நேரம் கிடைக்கும் போது எனக்கு கடிதம் எழுதுங்கள். நானும் தொடர்ந்து எழுதுகிறேன். என் கையெழுத்து சரியாக இருக்காது. காரணம் இரவு தூக்கக் கலக்கத்தில் அவசர அவசரமாக எழுதியது. அதனால் மன்னிக்கவும்.

By
உங்கள் அன்புச்சகோதரி மற்றம் தோழி!
ஜென்ஸி.
சிங்கப்பூர்.
Please pray for me.

‘மலர்கள் மலர்வதற்காக இயற்கை செய்யும் உதவிகள் வெளியே தெரியாது. அதைப்போலத்தான் நண்பர்கள்



செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சிங்கப்பூரிலிருந்து ஜென்ஸி ...


சென்னையில் நான் வாடகை வீட்டில் வசித்தபோது பக்கத்து வீட்டில் கவிதா என்ற பெண்ணும் அவள் சகோதரி ஒருத்தியும் அவளது அம்மா என மூன்று பேர் வசித்து வந்தார்கள். கவிதா என்னிடம் கொஞ்சம் கலகலப்பாக பேசுவாள். ஏதாவது விபரம் தேவை எனில் என்னைத்தான் கேட்பாள். சென்னையிலுள்ள பிரபல கார் கம்னியிலிருந்து அவளுக்கு இன்டர்வியூ வந்தபோது என் வழிகாட்டுதலினால்தான் வேலை கிடைத்தது 

அந்த நேரத்தில் நான் வேலை செய்த நிறுவனம் மூடும் நிலையில் இருந்ததால் வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
அப்போது இந்தக் கவிதா, எனக்கு ஜென்ஸி என்ற ஸ்நேகிதி (அக்கா) இருப்பதாகவும், அவர்கள் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும் சொன்னாள். வேண்டுமானால் நான் முகவரி தருகிறேன், நீங்கள் வேலைக்காக அவரிடம் கேட்டுப்பாருங்கள். ஒருவேளைஉங்கள் நல்ல நேரம் வேலை கிடைத்தாலும் கிடைக்குமில்லையா? முயற்சிதான் செய்து பாருங்களேன்என்றாள்.

ஆனால் அறிமுகமில்லாதவர்களிடம் எப்படி திடீரென்று கடிதம் எழுதுவது? அதனால் ஒருஏரோகிராம்வாங்கி வந்து, முதல் பாதி கடிதத்தை கவிதாவை எழுதச்சொல்லி, மறுபாதியில் நான் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு கடிதம் எழுதினேன். பத்தே நாளில் பதில் வந்தது. எனக்காக முயற்சி செய்வதாகவும், என்னை நண்பனாகவும், சகோதரனாகவும் ஏற்றுக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். எனக்கோ ஒரு புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம், எப்படியும் சிங்கப்பூருக்குப் போகப் போகிறோம் என்ற சந்தோஷம் மறுபுறம்.

ஒரு கட்டத்தில் இந்தக் கவிதா காணாமல் போய்விட்டாள். கார் கம்பனிக்கு அருகிலேயே வீடு பார்த்துக்கொண்டு போனவள் என்ன ஆனாள் என்று தெரியாது. ஆனால் இந்த ஜென்ஸியின் நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. தன் எல்லா மனக்குமுறல்களை எல்லாம் கொட்டித்தீர்த்தார் இந்த ஜென்ஸி. நான் என்ன எழுதினேன், எதைப் பகிர்ந்து  கொண்டேன் என்று நினைவில்லை.

மனிதர்கள் எல்லோருமே ஆதரவான உறவுக்கு ஏங்குகிறவர்களாகவும், தன் துயரங்களை நம்பிக்கையானவர்களோடு பகிர்ந்து ஆறுதல் அடைகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் காதலன், கணவன், நண்பன் என்று ஏதோ ஒரு துணையின் அன்புக்கு ஏங்குகிறார்கள். அது எதிர்பார்த்தவர்களிடம் கிடைக்காதபோது, யார் அப்போது நம்பிக்கையானவர்கள் கிடைக்கிறார்களோ அவர்களிடம் தன் மனத்துயர்களை பகிரத் தொடங்கிவிடுகிறார்கள்.

இதுவும் ஒரு காலகட்டத்தில் சூழ்நிலைகளினாலோ, கருத்து வேறுபாடுகளினாலோ, இடம் பெயர்தல்களினாலோ தொடர்பற்றுப் போய்விடுகிறது. ஆனாலும் பழைய நினைவுகளை, நண்பர்களை மறந்து விட்டார்கள் என்று நினைக்க முடியுமா? நான் இப்போது நினைத்து இங்கே எழுதிக் கொண்டிருப்பதைப்போல, அவர்களும் என்னை எப்போதாவது நினைத்துப் பார்க்கலாம்!

யாரோ ஒரு பக்கத்து வீட்டுப் பெண்ணின் அறிமுகத்துடன் தொடர்ந்த இந்த நட்பின் பரிமாணங்கள் என்னை அந்தக் காலகட்டத்தில் மிக மகிழ்ச்சியாக வைத்திருந்தது. எனது நட்பின் தேவையும், ஆறுதலும் ஜென்ஸியையும் சந்தோஷப்படுத்தியது. அவர் மூலம் வேலை கிடைத்ததோ இல்லையோ அவரின் நட்பு கிடைத்ததே பெரிய விஷயமாய்க் கருதினேன்

விடுமுறையில் அவர் இந்தியா வந்தபோது, எனக்காகவும், என் மனைவி குழந்தைகளுக்காகவும் துணிமணிகள் சாக்லெட் என்று கொண்டுவந்து அசத்தினார். இந்தியா வந்தபோது விமான நிலையத்தில் வரவேற்க நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பியிருந்தார்.  

எத்தனையோ முறை சென்னை விமானநிலையம் வழியே நான் சென்றிருந்தாலும், முதன்முறையாக, விமான நிலையத்தினுள், அதுவும் உறவினரல்லாத ஒருவரை வரவேற்க நான் சென்றது இன்றுவரை மறக்கமுடியாத நிகழ்வாகும். கணவர், உறவினர்களுக்குக் கூட அவர் வருவதைத் தெரிவிக்கவில்லை.

அவரின் கடிதங்களில் ஒரு பெண்ணின் மனத்துயரங்கள், அவரின் குடும்பச்சுமை, குழந்தையின் பிரிவு, அன்பு, பாசத்திற்கான ஏக்கம், வெளிநாட்டில் பணிபுரியும் சூழல் என எல்லாவற்றையும் அறிந்துகொள்ளலாம். அவரின் கடிதங்கள் அடுத்த பதிவிலிருந்து... தேதிவாரியாக இல்லாமல் முன்பின் இருக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துரைகளைச் சொல்லுங்கள்.



ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இடிக்கப்பட்ட எங்கள் வீடு



அம்மா சொல்வாள்
அடிக்கடி
இது
கல்லால் ஆன
கர்ப்பப் பை
ஊர்சுற்றி விட்டு
உறங்க வரும்
அண்ணன் நினைப்பில்
தொட்டில்
சுவரில் தொங்கும்
கறைபடிந்த
புகைப்படங்கள்
கல்வெட்டாக்கும்
இதனை
வெள்ளை அடித்தே
வெகுகாலமாயிற்று
அப்பாவின்
வார்த்தைகளிலோ
அரண்மனைதான்
பட்டணத்தில்
வீடுகட்டிய
சித்தப்பாக்கள்
அழைத்தபோதெல்லாம்
மறுத்த பாட்டிக்கு
இது
தாத்தா வாழ்ந்த கோவில்
சிதறிக்கிடக்கும்
செங்கல்கள்
இப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன
இரத்த சம்பந்தத்தை!
இடிக்கப்பட்ட
எங்கள் வீடு!

- நெல்லை ஜெயந்தா


சனி, 21 ஏப்ரல், 2012

உண்மையான நண்பர்களே உறவுகள்


என் உறவினரும் நண்பருமான திரு.ரவி எனக்கு எப்போதுமே நல்ல ஆலோசனைகளைத் தந்து வருபவர். நான் முதன் முதலாக வெளிநாட்டிற்குப் போனதும் எல்லோருக்குமே கடிதம் எழுதித் தெரிவித்தேன். அப்போது எனக்கு அவர் எழுதிய கடிதம் இது!


அன்புள்ள கவிப்ரியனுக்கு, 

ரவி எழுதும் கடிதம். உனது 3.10.2003 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். தீபாவளி ஃபண்ட் பிடித்த சமயமாதலால் உடனே கடிதம் எழுத முடியவில்லை. கோடைச்சுற்றுலா குளிர்ந்தது. வரும் கோடையில் ஆந்திரா, ஒரிஸா, பீகார், உத்திரப்பிரதேசம், உத்ராஞ்சல், டெல்லி, மேற்கு வங்காளம் போக உத்தேசித்து அதற்கான வேலையில் இறங்கியுள்ளேன். மொத்தம் 19 நாட்கள்.

உனது கடிதம் வந்த பின்பு புதிதாக சீட்டு ஆரம்பித்தேன். தற்போது ஆட்சியாளர்களால் பணப்புழக்கம் கடினமாக உள்ளதால் எல்லோருக்குமே வேலையில்லை. வருமானம் இல்லை. தற்போது புதிதாக அரிசி மூட்டைகள் (25 kg) வரவழைத்து, வீட்டில் வைத்து வியாபாரம் துவங்கியுள்ளேன். எதிர்பார்த்தபடி போகிறது. இதனை மேலும் விரிவாக்கவும் உடன் பருப்பு வகைகள், ஆயில் என அத்தியாவசியப் பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளேன். வளர்ந்தால் சூப்பர் மார்க்கெட், இல்லை என்றால் சைடு பிஸினஸ் ஆக இருக்கட்டுமே!

பெண்ணியம் தொடர்பான உன் எண்ணங்களை எழுத்தாக்கி வைக்கவும். எத்தனை புதுமைகள் வந்தாலும், புத்தகத்திற்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு. தனித்தனி தலைப்புகளில் உனது எண்ணங்களுடன், சிறிது கற்பனை, உதாரணங்களுடன் மேற்கோள் காட்டி, நகைச்சுவையுடன் எழுதலாம். கையெழுத்துப் பிரதியை தயார் செய்து வைக்கவும். இங்கு வந்தவுடன் செய்துவிடலாம்.

கடந்த மாதம் டி.டி. பொதிகையில் அபஸ்வரம் ராம்ஜியுடன் வாடகை வீடு சிறந்ததா? சொந்த வீடு சிறந்ததா? என்ற விவாதத்தில், நான் 2 வது தலைப்பில் பேசினேன். ஒளிபரப்பாகி பலரின் பாராட்டுதல்கள் கிடைத்தது.

உலகம் ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறதென்றே தெரியவிலலை. உடம்புக்கு வயது ஏற ஏற பிரச்னைகளும் வேகமாகத்தான் வளர்கிறது. அண்ணன் தம்பி உறவுகள் என்பதெல்லாம் போலி என்பதை உணரும் பருவம் இதுவென்று நினைக்கிறேன். இளமைக் காலங்களை இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்த்து வெறுத்துப்போகிறேன். தித்திக்கும் அந்த நினைவுகள் – அப்படியே நாம் இருந்திருக்கக்கூடாதா? என்ற ஏக்கத்தைத் தந்தாலும், நிகழ்காலம் கடமைகளை நினைவூட்டுகிறது. ஆனாலும் தினம் மூன்று வேளை சாப்பிடும் போதெல்லாம் எனக்கு இளமைக்கால நினைவுகளே அதிகம் வருகிறது.

என் தந்தை சொத்துக்களை பிள்ளைகளுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டால், தம்மை யாரும் கவனிக்கவோ, ஏன் மரியாதை கூட கொடுப்பார்களோ என்னவோ என்று எண்ணித்தான் கடைசிவரை சொத்தைப் பிரிக்கவில்லை. அருக்குப் பின் சொத்தை மட்டுமா அண்ணன் தம்பிகள் பிரித்தார்கள்? சொந்த பந்தங்களையும்தான்.

இந்து மதத்தின் வலிமையே, ஒற்றுமையே குடும்ப ஒற்றுமையில்தான் உள்ளது. அதற்கு ஆபத்து வந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. நான் நம்பாததால் அது பொய்யாக ஆகப்போவதில்லை. உன்னைக் குழப்பவில்லை. இனிவரும் காலத்தில் உறவுகள் பொய்யாகி, உண்மையான நண்பர்கள் உறவுகளாக வருவார்கள். இன்றைய உறவுகள் பணத்தை மட்டுமே குறியாக வைத்து உறவாடுகிறது. இது எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல. எண்ணற்ற குடும்பங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

நீ உனது மனைவி குழந்தைகளை முன்வைத்து அவர்கள் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை யோசித்து வாழ்க்கையை நடத்து. நீ வரும் முன்பு கடிதம் எழுது. புத்தகம் முயற்சி, அப்போதைய சூழல், எப்படி வெளியிடலாம் என்பதைப் பற்றியெல்லாம் பிறகு பேசுவோம்.
இடையில் புலம்பிய என் புலம்பல்கள் விரக்தியின் வெளிப்பாடு. அதை அறிவுறையாகவோ அனுபவ உரையாகவோ கொள்ள வேண்டாம். இன்றைய நம் ஊரின் நிலை இது. 

விரைவில் இன்டர்நெட் உபயோகிக்க கற்றுக்கொள்கிறேன். மற்றபடி இன்றுவரை மழை 50% கூட பெய்யவில்லை. தண்ணீர் பற்றாக்குறைதான். விடுமுறைக்கு வருமுன் கடிதம் எழுதவும். உனக்கு அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வாங்கவும். தாராளமயமாக்கலில் அனைத்து பொருட்களும், அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது என்பது உனக்கும் தெரியும்.

பிற அடுத்து.
அன்புடன்,
ரவி.

கடிதம் பற்றிய ஒரு உருக்கமான பதிவு...
ஹரணி பக்கங்களில் மடலேறுதல் என்ற பதிவில்........
'செல்போன் எனும் உயிர்க்கொல்லி உறவறுத்து..உறவின் வேரறுத்து..நம்பிக்கையை அறுத்து..வாழ்வின் சகலத்தையும் அறுத்து..உயிரைக் கொன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது.'

கடிதம் ஒரு அற்புதமான வாழ்வின் அடையாளம். கடிதம் அற்புதமானது. அது ஒரு சுகம். கடிதம் தவ அமைதி.





வியாழன், 19 ஏப்ரல், 2012

பிரித்த மடல்



அன்பிருந்தவளே!
நீ
அனுப்பிய மடல் கிடைத்தது
வரிவடிவம் தானே வழக்கம்
எப்படி உனக்கு
எழுத வருகிறது
வலி வடிவத்தில்?
உன் ஒற்றைக் கடிதம்
பிப்ரவரி14 ஐ
என்
எல்லா நாட்காட்டியிலும்
கிழித்து விட்டதே
தலைவி!
நான் மட்டும்தான்
அஞ்சல் பெட்டியில்
புதைக்கப்பட்டவன்
நீ
பதிலாய் அனுப்பிய
இந்த மடலே
என் வாழ்க்கையைக்
கேள்வி யாக்கிவிட்டது.
சொல்லிவிடு!
காதலை
மத்த்தின் பெயரால்
மறுத்த
இந்த மடலை
என்ன செய்வது…
உன் மதப்படி புதைப்பதா…?
என் மதப்படி எரிப்பதா…?

- நெல்லை ஜெயந்தா