செவ்வாய், 31 டிசம்பர், 2013

மறக்க முடியாத ஆண்டு - 2013


வருடந்தோரும் புத்தாண்டு வரத்தான் செய்கிறது. ஒவ்வோரு மனதிலும் சில நம்பிக்கைகள். வரும் ஆண்டாவது நம் வாழ்க்கையில் நல்லது நடக்காதா என்று. ஒவ்வொருவருக்கும் விதம் விதமான எதிர்பார்ப்புகள். ஆசை யாரை விட்டது! ஒவ்வொருவரின் லாப நட்டக்கணக்குகள்தான் அந்த ஆண்டு சிறப்பானதா இல்லை மோசமானதா என்று தீர்மாணிக்கின்றன.

இயற்கைப் பேரழிவுகளும், விபத்துக்களும் கூட அந்த ஆண்டின் தகுதியை நிர்ணயம் செய்துவிடுகின்றன. ஆனால் காலத்துக்கேது ஆண்டும் கிழமையும். அது தன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. விலங்குகள் எல்லாமே அதற்குத் தகுந்தாற்போல் தங்களுடைய வாழ்கையை தகவமைத்துக் கொள்கின்றன.

ஆனால் இந்த மனிதர்களுக்கு மட்டும் இது மிகப்பெரிய போராட்டம். பணம் பொருள், சொத்து, உறவு என எல்லாவற்றாலும் வாழ்க்கை பிண்ணிப் பிணைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். 2004-ல் தமிழ்நாட்டில் சுனாமிப் பேரலை வந்து கடற்கரையோர மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

அதே போல இந்த ஆண்டு ஓடிசாவில் ‘’பைலின்’’ புயல் வந்து வாரிச் சுருட்டிவிட்டுப் போனது. சுனாமியின் போது நான் தமிழ்நாட்டில் இல்லை. அப்போதுதான் ‘துபாயில்’ கால் வைத்திருந்தேன். பணியில்கூட சேர்ந்திருக்கவில்லை. நான் அங்கு போன மூன்றாவது நாளில் சுனாமி வந்து அடித்து விட்டுப் போனதை தொலைக்காட்சியில்தான் பார்க்க நேர்ந்தது. ஆனால் இந்த ‘பைலின்’ புயலின் போது ஒடிசாவில் தாக்குதலுக்கு முக்கிய இலக்கான பகுதியில் இருந்தது மறக்க முடியாத அனுபவம். அந்த அனுபவத்தை ''புயலும் வாழ்வும்’’ என்ற பதிவில் எழுதியிருந்தேன்.


இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு மாநில முதல்வரை (ஒடிசா) மிக அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பையும் பெற்றேன். தமிழ்நாட்டுச் சூழலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. மிக எளிமையான மக்களுக்கான முதல்வர் ‘’நவீன் பட்நாயக்’’ என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. எங்கள் நிறுவனத்தோடு டாடா ஸ்டீல் நிறுவனமும் இணைந்து கலிங்கநகர் பகுதியில் அமைத்த ஒரு தொழிற் பயிற்சி நிறுவனத்தைத் துவக்கி வைக்கவே ஒடிசா முதல்வர் வந்திருந்தார். அதுவும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 

புத்தகங்களைப் படிப்பது என்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது. ஒரு காலத்தில் புத்தகப் புழுவாகவே இருந்தேன். வெளியில் எங்கு கிளம்பினாலும் கையில் புத்தகம் இருக்கும். அல்லது ஏதாவது வாங்கிவிடுவேன். பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்கிளிலும், பயணங்களின் போதும் புத்தகம் எப்போதும் என்னுடன் இருக்கும்.

ஆனால் இப்போது இணைய தளங்களில் வாசிப்பதோடு வாசிப்பனுபவம் நின்று போய்விடுகிறது. அதனால் புத்தகங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. படிப்பதற்கு நேரமும் இருப்பதில்லை. இப்படி நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் ‘’தேவியர் இல்லம்’’ மிக முக்கியமானது. அதில் ஜோதிஜி அவர்களின் எல்லா பதிவுகளையும் படித்துவிடுவேன்.
இந்த ஆண்டு அவரின் ‘’டாலர் நகரம்’’ புத்தகமாக வெளிவந்தபோது வெகு ஆர்வமாக அவருக்கு கடிதம் எழுதி எனக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதுதான் இந்த ஆண்டு நான் படித்த ஒரே புத்தகம். அந்த புத்தகத்தைப் பற்றிய எனது கருத்துக்களை இந்த எனது பதிவுகளில் (டாலர் நகரம் எனது பார்வையில்..., வேலையை மட்டும் விட்டுடாதேடா...) எழுதியிருக்கிறேன். 

இப்போது மீண்டும் அவரது ஈழம் குறித்த பதிவுகளைத் தொகுத்து மின்நூலாக இலவசமாக வெளியிட்டிருக்கிறார். இந்த இணைப்பில் 'ஈழம் வந்தார்கள் வென்றார்கள்' என்ற அந்த நூலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆனாலும் நான் இதை இன்னும் முழுமையாக படிக்கவில்லை.

அப்புறம் இந்த ஆண்டு நான் எழுதிய பதிவுகளில் காதல் திருமணம் மற்றும் ஜாதி குறித்த ஒரு பதிவு எனக்கு மன நிறைவைத் தந்த ஒன்று. அந்தப் பதிவை (தன் வினை தன்னைச்சுடும்) இந்த இணைப்பில் படிக்கலாம். மற்றுமொரு பதிவாகிய 'என் இனிய ஸ்நேகிதிக்கு' என்ற பதிவில் என் பழைய காதல் கதையைச் சொல்லியிருந்தேன். ஆனால் நான் இன்னும் எழுதவேண்டியது இன்னும் இருக்கிறது.

சதா எழுதிக்கொண்டேயிருக்கும் வா. மணிகண்டனின் 'நிசப்தம்' தளமும் நான் விரும்பி தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் ஒன்று. இவரின் தளத்தைப் பார்த்து நாமும் இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று நினைப்பேன். அப்புறம் வேலைப் பளுவில் எல்லாம் மறந்துபோவேன்.

அதே போல குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு சலிப்பில்லாமல் எழுதிக்கொண்டிருக்கும் 'காணாமல் போன கனவுகள்' ராஜி அவர்களின் பதிவுகளும், பத்திரிகைத் துறையிலும், சிறு கதைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் 'உஷா அன்பரசு' இவர்கள் இந்த ஆண்டில் என்னைக் கவர்ந்த பதிவாளர்கள்.

மேலும் இந்த பதிவில் 'கவிப்ரியன்' என்ற புனைப்பெயரில் பதிவுகளை எழுதி வந்த நான் முதன்முறையாக நான் யார் என்பதையும் அறிவிக்கிறேன். அதாவது என் நிஜமுகத்தையே பதிவின் முகப்பில் காட்டியிருக்கிறேன். எனது நிஜப்பெயர் எம்.ஞானசேகரன். வேலூர் மாவட்டம் இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலுக்கு மிக அருகில் உள்ள எனது சிற்றூர்  வேலூர் மற்றும் ஆர்காட்டுக்கு நடுவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இனி நிஜப்பெயரிலேயே சந்திப்போம்.

அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு (2014) வாழ்த்துக்கள்!

அன்புடன், 
கவிப்ரியன் என்கிற ஞானசேகரன்.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

புரட்சித்தலைவரை முதன் முதலாக பார்த்தபோது… ரோஹினி.

1978 – நான் தனியார் பள்ளியொன்றில் தமிழாசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். மலையரசிக்கும் வானரசனுக்கும் பருவந்தோறும் நடக்கும் ஊடல் முற்றிசிணுக்கும் தூறல்சிறு மழையானது. சிறு மழை-பெருவர்ஷமானது

இரவும் பகலும் ஜலப்பிரவாகத்தில் ஜீவித இயக்கும் ஸ்தம்பதமானது. புயலால் மக்கள் அடைந்த கஷ்ட நஷடங்கள் நெடிய கண்ணீர்க் கதைகளாயின. உயிர்ச்சேதம்-உடைமைச் சேதங்களுக்குப் பரிகாரமாக அரசு ஆறுதல் கரம் நீட்டி நிதியளித்ததோடு-பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு முன் பணம் கொடுக்கவும் முன் வந்தது.

ஆனால் அரசு அலுவலர்களுக்கு மட்டுமே அட்வான்ஸ் அளிக்கப்படும் என்ற உயர் அலுவலர்களின் உதாசீனத்தால் அட்வான்ஸ் மறுக்கப்பட்ட சோர்வோடு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியினர் அவசரக் கமிட்டி அமைத்தனர். நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில்தானே பணிபுரிகிறோம்.

எங்கள் கூரை சரியவில்லையா? எங்கள் உடமைகள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகவில்லையா? வெள்ளமும் புயலும் எல்லோருக்கும் பொதுதானே! என்ன செய்யலாம்! என்ன செய்யலாம்என்று குமுறிக்கொண்டிருந்தபோது

செய்தி வந்தது. மான்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவர் அவர்கள் உதகைக்கு வருகிறார்! பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு பேச்சு மருந்து பூசப் பள்ளித்திடலில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார் என்று.

‘’தாய்க்குலம் சார்பாக சார்பாக நீங்களும் வரவேணும்’’ அழைப்பை ஏற்று அவர்களோடு அவர்களில் ஒருத்தியாகக் காத்து நின்றேன். நிமிடங்கள் மணிகளான பின்னர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொன்மனச்செம்மல் வெளியே வந்தார்.

முற்றுகையிட்டோம். முன் ஒத்திகையின்மையால் சில ஆசிரியர்கள் சொற்சுருக்கமற்று செய்தியை நீட்டியபோது முதல்வர் கண்கள் தானாகக் கைக்கடிகாரத்தில் படிந்தன. பளீரென இடைவெட்டி உரையாடலில் நுழைந்தேன். ‘’அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் புயல் நிவாரண முன்பணம் கிடைக்கவில்லையே!’’

‘’அது எப்படி கிடைக்காமல் போகும்? ஆணை எல்லோருக்கும் பொதுதானே அம்மா!’’
‘’இல்லை! எங்களுக்கு மறுக்கப்பட்டது.’’ ‘’உடனே மாற்றப்படும்’’.
மிக்க நன்றி’.
நாடோடி மன்னன் பாணியில் ஒரு கையசைப்பு, ஒரு புன்னகை, கரங்குவிப்பு. விண்ணப்பத்தினை கையில் வாங்கிக்கொண்டு காரேறிப் பறந்தார்.
அப்புறம்-
அன்று மாலை பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நொந்திருந்த ஆசிரியர்களுக்கு இதமாக சில சொல்லி ஆணையிட்டார். அடுத்த சில நாட்களில் அட்வான்ஸ் கிடைத்தது.

ஒரு தலைவனுக்கான சுறுசுறுப்போடு துணிந்து விரைந்து செயலாற்றிய பாங்கு. நாலே வரிகளில் நடந்த உரையாடலில் ஆசிரியர்களின் துயர் துடைத்த சாமர்த்தியம்!

முதன் முறையாக புரட்சித்தலைவரைச் சந்தித்த போதே-நான் பார்த்த நிர்வாகத்திறன்! இப்போது நினைத்தாலும் என்னைப் பூரிக்க வைக்கிறது.
 
கவிதாயினி ரோஹினி.

மக்கள் மனதில் என்றும் மின்னும் எம்.ஜி.ஆர் - தினமலர்

நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? எதிரியை நோக்கிய வாள் வீச்சும், கொஞ்சும் உன் தமிழ் பேச்சும், அந்த சிரிப்புக்கு இடையே ரசிகனின் மூச்சும் இருந்ததை, யார் தான் மறப்பார்? "நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணம், ஒருவர் மனதிலே ஒருவரடி,' அது, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவனின் திருவடி.

பெயரில் கூட, அவருக்கு சுமை வேண்டாம் என்பதால் தான், எம்.ஜி.ராமச்சந்திரனை, எம்.ஜி.ஆர்., ஆக்கியது தமிழகம். "நமக்கென்று யார் வருவார்... கேட்பதை இங்கு யார் தருவார்...' என, தமிழகம் தனித்திருந்த போது, திரையில் பார்த்த நாயகன், தரையில் இறங்கி வந்தார், மக்கள் திலகமாக!நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ பார்க்கவில்லை, வெகுஜனம்; எங்கள் வீட்டு பிள்ளையாக, கலங்கரை விளக்கமாக, ஒளி விளக்காக, எங்கள் தங்கமாக, ஆசை முகமாக, ஆனந்த ஜோதியாக, இவ்வளவு ஏன், "ஆயிரத்தில் ஒருவனாகவே...' பார்த்தது. 
 
தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். எம்.ஜி.ஆர்., என்ற சரித்திரத்தை படிக்க, புத்தகம் தேவையில்லை; அவர் நடித்த படங்களும், பாடல் வரிகளுமே போதும்.
 
"இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும், மான்கள் எனது உறவாகும், மானம் எனது உயிராகும், தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம், மலர்கள் முத்தம் தரலாம், அதில் மயக்கம் கூட வரலாம்,' இந்த வரிகள் போதும், அந்த மாமனிதனின் எண்ணங்களை அறிய. "சிரித்து வாழ்ந்த போதும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாத...' அந்த சிவப்பு மனிதனின் கரங்கள், கட்டி அணைத்த கருப்பு மனிதர்களின் தோள்கள், எத்தனை! மக்களை மதிக்க தெரிந்த அந்த குணம் தான், "நமக்கென்று ஒருவன்; அவனே நமக்கு இறைவன்,' என, எம்.ஜி.ஆர்., நினைவுகளை நம் மனதிலே, நிலை நிறுத்துகிறது.சொல்லாமல் வரும் புயலையும், நிலநடுக்கத்தையும் சந்திக்க துணியும் மனிதன், இந்த மனிதரின் பிரிவை தாங்க முடியாமல் அழுத தினம், இன்று. 
 
காலத்தை வென்ற மனிதனை, காலன் வென்றதும், தகர்ந்தது தமிழக மக்கள் மனம். திரைக் காட்சியிலும், அரசு ஆட்சியிலும் மக்களோடு மக்களாய் வாழ்ந்த, அந்த மூன்று எழுத்து நாயகனை, இன்றும் நம் மூச்சில் சுமக்கிறோம். "வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?; சரித்திரம் சொல்கிறது, அதுவே எம்.ஜி.ஆர்.,"என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து, போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து, என்னை அடைய... வந்தாலும் வருவாண்டி...' என காத்திருக்கும் கூட்டம் தனி! எம்.ஜி.ஆர்., வாழ்க்கை பயணத்தில், அவருடன் பழகிய சிலரை சந்தித்தபோது...

எனக்கு இரு குலதெய்வம்:

கணேசன், மாநகராட்சி துப்புரவு கண்காணிப்பாளர், மதுரை:  

எனக்கு இரு குலதெய்வம்; ஒன்று கருப்பணசாமி, மற்றொன்று எம்.ஜி.ஆர்., அவரால் வாழ்க்கை பெற்ற சாமானியர்களில் நானும் ஒருவன். சென்னையில் அவரை சந்திக்க, வீட்டிற்கு பல முறைச் சென்றுள்ளேன். பார்த்ததும், "சாப்பிட்டாயா?' என்ற கேள்வி தான், அவரிடம் முதலில் வரும். உலகத்தமிழ் மாநாட்டிற்காக, மதுரையில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பார்க்கச் சென்றேன். "அடிக்கடி, என்னை பார்க்க வருகிறாய்; உனக்கு வேலை இல்லையா?' எனக்கேட்டார். "இல்லை...' என, நான் சொல்லி முடிப்பதற்குள், "மதுரை மாநகராட்சியில் வேலை பார்க்கிறாயா?' என, அவரே பதிலையும் முடித்து, பணி ஆணையும் வழங்கிவிட்டார். இன்று என்னிடம் இருப்பவை, அன்று எம்.ஜி.ஆர்., வழங்கியவை. என் வீடு, வாகனங்களில் கூட, எம்.ஜி.ஆர்., பெயர் தான், வைத்திருக்கிறேன். எங்களிடம் வாழும் போது, அவர் எப்படி மறைவார்?

நான் முதல் ஏவுகணை:

மாயத்தேவர், முன்னாள் எம்.பி., திண்டுக்கல்; 

எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கிய போது, திண்டுக்கல் லோக்சபாவிற்கு இடைத்தேர்தல்; பாசத்தில், என்னை வேட்பாளராக்கினார். 16 சின்னங்களை, கலெக்டர் என்னிடம் காண்பித்தார்; இரட்டை இலையை தேர்வு செய்து, எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தேன்; அவர் காரணம் கேட்டார். "இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் வெற்றியை காட்டியது இரட்டை விரல்; அது போல், நாமும் காட்டலாம்,' என்றதும், மகிழ்ச்சியடைந்தார்.அவர் உண்ணும் போது, உடன் யார் இருந்தாலும், உண்ண வேண்டும். சென்னை ஓட்டலில், அவருடன் சாப்பிடும் போது, நான் பாதியில் எழுந்தேன்; என்னை உட்காரச் சொன்னவர், "இந்த உணவுக்காக தான், நீ வக்கீல், நான் நடிகன்; அதை வீணாக்காதீர்கள்,' என, அறிவுரை வழங்கி, உண்ண வைத்தார். தன் அரசியல் ராக்கெட்டில், முதல் ஏவுகணை என்ற பெருமையை, எனக்கு தந்த உத்தமர் அவர்.
மறக்க முடியாத மனிதநேயம்:

எஸ்.டி.சண்முகவேலு,  எரசக்கநாயக்கனூர், தேனி: 

சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் அவரை காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார். "உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, நான் கூறியதும், என்னை கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார். அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, அவரை சந்திக்க, மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தேன். அடையாளம் கண்டு, உதவியாளரிடம் என்னை அழைத்து வர செய்தவர், என் மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, என் மனைவியிடம் நலம் விசாரித்தார். வெளியே வந்த என் மனைவி, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது; இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசியிருக்கிறார் என்றால், அவருக் காக நம் சொத்துக்களை இழந்தாலும், பரவாயில்லை,' என, நெகிழ்ந்து போனார். மறக்க முடியாத மனிதநேயர், அவர்.

பஞ்சாட்சரம், குடும்பத்தலைவி, தட்டட்டி, சிவகங்கை: 

என் கணவர் சிதம்பரம், சென்னை ஓட்டலில் வேலை பார்த்த போது, அவரது ருசி அறிந்து, தன் வீட்டு சமையல்காரர் ஆக்கினார் எம்.ஜி.ஆர்., 30 ஆண்டுகள், அவருடன் தான் தங்கியிருந்தார்; பொங்கலுக்கு மட்டும் ஊருக்கு வருவார். சம்பளத்திற்காக இல்லாமல், எம்.ஜி.ஆர்.,ன் பாசத்திற்காக தான், என் கணவர், அவரிடம் வேலை பார்த்தார். ஒரு நாள் கூட, அவரை வேலைக்காரர் போல, அவர் நடத்தியது இல்லையாம். "அய்யா... வாங்க, போங்க,' என்று தான், அழைப்பாராம். என் மகள் திருமணத்திற்கு, நாங்கள் எதிர்பார்த்தை விட, அதிகமாகவே செய்தார். இன்று என் கணவர் என்னுடன் இல்லை; அவர் நேசித்த மனிதன் இங்கு இல்லாத போது, அவர் மட்டும் எப்படி, என்னுடன் இருப்பார்?
சிரிப்பில் மயங்கி விடுவோம்:

எஸ். நாகராஜன், ஓட்டல் மேலாளர்,அருப்புக்கோட்டை : 

1977 ல் அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று, நன்றி அறிவிப்புக்காக, 3 நாட்கள் அருப்புக்கோட்டை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அவருக்கு தேவையான உணவுகள், மதுரை ஓட்டலில் இருந்த வந்தது. இருப்பினும், அருப்புக்கோட்டை தனலட்சுமி ஓட்டலில் இருந்து, நானும் உணவு கொண்டு செல்வேன்; அவற்றையும் உண்பார். நண்பர் ஆறுமுகம் வீட்டில் தயாரான கீரை மசியலை, விரும்பி உண்பார். அப்போது, அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. வரவேற்கும் அவரது சிரிப்பில், நாங்கள் மயங்கிவிடுவோம். அவரது சென்னை வீட்டில், 3 முறை சாப்பிட்டிருக்கிறேன். "அவங்களை நல்லா கவனிங்க,' என, தன் வேலையாட்களிடம் கூறுவார். இவ்வாறு அந்த பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம் பற்றி மனம் திறந்தனர்.