புதன், 29 அக்டோபர், 2014

அரசியல் அகராதி


ஈடு செய்ய முடியாத இழப்பு; யார் மரணமடைந்தாலும் கூறப்படுகிற மரபு அஞ்சலி.
ஈழப் போராளிகள்; கலைஞரின் பாச உணர்வைச் சோதிப்பவர்கள்.
உச்சகட்டம்; தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் தாறுமாறாகப் பேசுகிற நேரம்.
உடந்தை; அமைச்சர்களோடு அதிகாரிகள் இணைந்து செயல்படுகிற முறை.
உடன்பாடு; ஒரு கட்சியின் ஊழல்களை இன்னொரு கட்சி கண்டு கொள்ளாமல் இருக்க செய்யப்படுகிற ஏற்பாடு.
உடன்பிறப்பு; எதைச்சொன்னாலும் நம்பும் கட்சித் தொண்டர்.
உடன் பிறவா சகோதரி; கட்சிக்கு சமாதி கட்ட உதவி செய்பவர்.
உட்கட்சி விவகாரம்; விரைவில் பொது விவகாரமாவது.
உட்கட்சி ஜனநாயகம்; உட்கட்சித் தகராறுக்கு கட்சித் தலைவர் வைக்கும் பெயர்.
உணர்வு பூர்வமாக; அறிவுக்கு இடம் கொடுக்காமல்…
உண்ணாவிரதம்; இரண்டு வேளை சாப்பாட்டுக்கு இடைப்பட்ட காலம் அல்லது இரண்டு வேளை சாப்பாட்டை தியாகம் செய்து கிடைக்கும் பிரியாணிக்காக காத்திருப்பது.
உதவியாளர்; அமைச்சருக்கு தவறானவற்றைச் சொல்லிக் கொடுத்து, பின் அவரோடு சேர்ந்து கைதாகிறவர்.
உதறிவிட்டுச் செல்லத் தயார்; பதவியைத் துண்டு போலக் கருதுவதாகக் கூறி விட்டு துண்டை மட்டும் உதறி தோளில் போட்டுக் கொள்ளும் போது தலைவர் கோபத்துடன் கூறுவது.
உயரிய நெறி; அந்தக்கால அரசியல்வாதிகள் கடை பிடித்ததாகக் கூறப்படுவது.
உயர் அதிரகாரிகள்; நிகழ்காலத்தில் அமைச்சருக்குக் கட்டுப்படுவதா, எதிர்காலத்தில் சம்மனுக்குக் கட்டுப்படுவதா என்ற ஊசலாட்டத்தில் இருப்பவர்கள்.
உயர் நீதிமன்றம்; ஆளும் அரசுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் அமைப்பு, வழக்குகள் தேங்கியிருக்கும் இடம்.
உயர்ந்த நோக்கம்; அரசியலுக்கு தொடர்பில்லாதது.
உரிமைக்கு குரல் கொடுத்தல்; எதிர்க்கட்சியாக இருக்கும் போது தீவிரமாக கடை பிடிக்கப்படும் கொள்கை.
உரிமை மீறல்; சட்டசபையில் ஆளும் கட்சியினர் நடந்து கொள்ளும் முறையை விமர்சனம் செய்தல்.
உரிய மரியாதை; தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கொடுக்கப்படுவது.
உருப்படியான திட்டங்கள்; உடனடியாக ஓட்டுக்களைப் பெற்றுத் தர முடியாத திட்டங்கள்.
உருவ பொம்மை; எதற்காவது தீ வைத்து கொளுத்தினால்தான் வெறி அடங்கும் என்கிற நிலையில் அரசியல்வாதிகள் கொளுத்துவது.
உரை நிகழ்த்துதல்; வாய்க்கு வந்தபடி பேசுதல் அல்லது யாராவது எழுதிக்கொடுத்ததைப் படிப்பது.
உலகத்தமிழ் மாநடு; முதல்வரின் புகழைப் பரப்புவதற்காக நடத்தப்படுவது.
உலக வங்கி; 90 சதவிகித ஊழலுக்கும் 10 சதவிகித திட்டத்திற்கும் கடன் கொடுக்கும் நிறுவனம்.
உளவுத் துறை; முதல்வர் மனதுக்குப் பிடித்த தகவல்களைக் கண்டுபிடித்து அவற்றை அவரிடம் தெரிவிக்கும் துறை.
உளறுதல்; ஊழல் விவகாரம் வெளியே வரும் போது அரசியல் தலைவர்கள் பேட்டியளிக்கும் முறை.
உள்நோக்கம்; கெட்ட நோக்கம்.
உள்ளாட்சித்தேர்தல்; மக்களுக்குக் கிடைக்கும் இடைக்கால மரியாதை.
உறவு; லாப நோக்கில் உருவாக்கப்படுவது.
உறவுக்குக் கை கொடுத்தல்; ஆட்சிக்கு ஆபத்து வராமல் இருக்க கடைபிடிக்கப்படும் ராஜ தந்திரம்.
உறுதி மொழி; சொல்லி முடிக்கப்படும் வரை மீறப் படாதது.
உற்பத்திப் பெருக்கம்; மக்கள் தொகை விஷயத்தில் மட்டும் வெற்றியடையும் திட்டம்.
உற்றார் உறவினர்; பெயரைக் கெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.
ஒரு பழைய துக்ளக்கில் சத்யா.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

தமிழனுக்கு எதிரி யார்?

(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)

எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த ஒற்றுமையின்மையும் இருக்கும்போல! தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்பது எனது இந்த பன்னிரெண்டு ஆண்டு கால வெளிநாடு, வெளி மாநில வாழ்க்கையின் போது அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.  

எங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே என்னுடைய இடத்தில் இருந்தவர் ஒரு தமிழர்தான் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? முதன்முறையாக வடநாட்டில் வேலை செய்யப் போகிறோம், தமிழர்கள் யாராவது உடனிருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


உடன் பணிபுரிபவர்களிடம் விசாரித்தேன். அப்போதுதான் கலிங்கநகரில் சென்னையைச் சேர்ந்த ஒருவர்தான் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதாக அறிந்தேன். அங்கு போகத்தானே போகிறோம், பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டேன். அதே நேரத்தில் ஒரு ஐந்து மாதம் சில பணிகளுக்காக நான் கோபால்பூரிலேயே தங்க வேண்டியதாகி விட்டது.

இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் விடுதியல் அவர்கள் இரவில் உறங்குவதற்காக கட்டில் ஒன்றை (இரண்டு பேர் தூங்கும் வசதி கொண்டது) வடிவமைத்து, அதை நானே மாணவர்களுக்காக செய்முறைப் பயிற்சியாக மாற்றி மிகக் குறிகிய காலத்தில் பெரிய எண்ணிக்கையில் கட்டில்களை உருவாக்கி எங்கள் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கினேன்.

கலிங்கநகரில் அப்போது பயிற்சிக்காக வந்த மாணவர்கள் விடுதியில் தரையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உடனடியாக என்னை கலிங்கநகருக்கு அனுப்பி அங்கும் இதே போல் கட்டில்களை மாணவர்களை வைத்தே உருவாக்குவது முடிவு செய்தார் முதல்வர். எனவே நான் கலிங்கநகர் இருக்கும் ஜாஜ்பூர் மாவட்டத்திற்குப் பயணமானேன். இது கிட்டத்தட்ட கோபால்பூரிலிருந்து கிட்டத்தட்ட 250கி.மீ.தூரமுள்ளது.


தலைநகர் புவனேஷ்வர், கட்டக் ஆகிய நகரங்களைத் தாண்டி ‘ஜாஜ்பூர் ரோடு’ என்கிற இரயில் நிலையம்தான் நான் இறங்க வேண்டிய இடம். முதல் முறையாக அந்தப் பகுதிகளுக்குப் பயணம் செய்கிறேன். நான் வருவது பற்றி ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அதற்கான ஏற்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையினால் நான் அதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளவில்லை. இரவு 11 மணி வாக்கில் அங்கு இறங்கி எங்கள் அலுவலக நண்பருக்கு கைப்பேசியிலிருந்து தகவல் சொன்னேன்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வரச்சொன்னார். காரின் எண்ணைக் கொடுத்து வெளியே காத்திருப்பதாகச் சொன்னார். வெளியே வந்த போது அந்தக் குறிப்பிட்ட காரின் அருகே ‘பியர்’ (Beer) பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு ஒரு நபர் குடித்துக் கொண்டிருந்தார்.

அருகே சென்று விசாரிக்க எத்தணிக்கையில், ‘நீங்கதான் கவிப்ரியனா’ என்று கேட்டார் அந்த குடித்துக்கொண்டிருந்த நபர். ஆமாம், நீங்கள்தான் ‘சாமுவேல் ராஜ்’ தானே என்று கேட்டேன். ம்… என்று அதிகாரத் தோரணையோடு தலையாட்டிவிட்டு, இந்த வண்டில நீங்க போங்க, நான் நாளைக்கு காலைல புவனேஷ்வர்ல நடக்க இருக்கும் ‘மீட்டிங்குக்கு’ போறேன். ஒண்ணு ஞாபகம் வச்சுக்கங்க நான் மீட்டிங் போறதுனாலதான் இந்த கார் உங்களுக்கு இப்போ கிடைச்சது. இல்லன்னா இன்னைக்கு இரவு முழுவதும் இந்த இரயில்வே நிலையத்துல தூங்கிட்டு பொழுது விடிஞ்சு பேருந்துலதான் போக வேண்டியிருந்திருக்கும் என்று மிரட்டல் பாணியில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

புதிய இடத்தில் நமக்கு உதவ, தோள் கொடுக்க ஒரு தமிழர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வந்த எனக்கு முதல் சந்திப்பிலேயே அந்த நபர் எப்படிப் பட்டவர் என்பது புரிந்து போயிற்று. இவனோடு (இதற்க்கபுறம் அவனுக்கென்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது) எப்படி வேலை செய்வது என்று போகும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே போனேன்.

ஆரம்பமே இப்படி என்றால், இங்கே வேலை செய்வது மிகக் கடினம் என்பது தெரிந்து போயிற்று. ஆனாலும் அவசரப்படக் கூடாது. பார்ப்போம் சமாளிக்க முடியவில்லை எனில் வேலையை உதறிவிட்டுப் போக வேண்டியதுதான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆக இங்கே எனக்கான எதிரி ஒரு தமிழன்தான் என்பது மட்டும் தெளிவாகி விட்டது.

ஆனால் இப்போது நினைத்தால் அவன் என்னை எதிரியாக நினைத்தோ அல்லது தனக்கு போட்டியாக வந்துவிட்டானே என்று நினைத்துதான் அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் நான் அங்கு போய்ச் சேர்ந்த சில மாதங்களில் அவனை வேலையிலிருந்தே தூக்கியடிக்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியது.


ஞாயிறு, 26 அக்டோபர், 2014

சுப்ரமண்யம் சுவாமியின் சோதிடம்!



தனது கட்சி ஆட்சியிலிருக்கும்போதே முன்னாள் முதல்வாரகியிருக்கிற ஜெயலலிதாவின் தண்டனை குறித்த எனது கருத்துக்களை பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். அந்த நேரத்தில்முடியவில்லை. ஆனாலும் தினம் தினம் பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம்தான் இருக்கிறது. பதிவுலகம் மந்தமாக இருந்தாலும் முகநூலில் கலந்து கட்டி அடிக்கிறார்கள். 

நம்முடைய பதிவுகள் பழையவைகளை நினைவு படுத்தும் மறக்க முடியாத நினைவுகள்தானே! ஜெயலலிதா அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகி பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் படு தோல்வி அடைந்த தருணத்தில் ஜெயலலிதா பற்றி சுப்ரமண்யம் சுவாமி 1991-1996 காலகட்டத்தில் சொன்னவற்றிலிருந்து சில துளிகள்….

இப்போது ஆட்சியில் இருப்பது (ஜெயலலிதா) ஒரு பிசாசு. ராட்சசி. இவரை நான் பதவியில் உட்கார வைத்தேன். எத்தனை அடி அடித்தாலும் அவரை சிறையில் போடாமல் விடமாட்டேன்.   1992-ல்.

ஜெயலலிதாவுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே ரகசியத்தொடர்பு உள்ளது. ராஜிவ் காந்தியைக் கொலை செய்யப்போவதாக விடுதலைப் புலிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்ததால்தான் தமிழ்நாட்டில் ராஜிவ் காந்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. 22.07.1995-ல் ஜெயின் கமிஷனில் கூறியது.

ஜெயலலிதா என்னிடமிருந்து தப்பவே முடியாது. அவரை அகற்றாமல் நான் தூங்க்கப் போவது இல்லை. ஜெயலலிதாவிடமிருந்து ரூ.2000 கோடியைப் பிடுங்கி அரசிடம் ஒப்படைத்து விட்டுத்தான் நான் தூங்கப் போவேன். சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்ட வழக்கு போன்றவற்றில் ஜெயலலிதா கிடுக்கிப் பிடி போல மாட்டிக்கொண்டிருக்கிறார்.. அதிலிருந்து ஜெயலலிதா தப்பிக்கவே முடியாது… சினிமா கலாச்சாரம் மாற வேண்டும். 30.11.1995- மாலை முரசில்.

அ.தி.மு.க.வோடு சேர்வது ஒரு அரசியல் தற்கோலை ஆகும். அதனுடன் காங்கிரசு மட்டுமல்ல, வேறு எந்தக் கட்சியும் சேரக்கூடாது, ஏனென்றால் ஜெயலலிதா ஒரு அரசியல் கிரிமினல்… சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்டது. வக்கீல் விஜயன், சண்முக சுந்தரம் ஆகியோர் பயங்கரமாக தாக்கப்பட்டனர். இப்படிப்பட்ட ஜெயலலிதாவோடு கூட்டு சேர்வதை தார்மீக அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. 15.03.1996 மாலைமுரசில்.

ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு பயங்கரக் காடாகி விட்டது. அந்தக் காட்டில் உள்ள கொள்ளைக்காரி ராணி போல ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். இப்பட்டிப்படவரோடு காங்கிரஸ் கூட்டு சேரவே கூடாது. 24.03.1996 மாலை முரசில்.
 
தமிழக சட்டசபை, பாராளுமன்ற தேர்தலில் பெருமளவு தில்லு முல்லு நடந்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார். இது தமிழக மக்களை அவமதிப்பதாகும். தனது எந்த தவறுக்கும் ஜெயலலிதா வருந்தவில்லை. தினகரன் 13.05.1996 ல்.

நாற்பது திருடர்களான சசிகலாவின் உறவினர்களைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டாலும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர் அலிபாபா என்ற ஜெயலலிதாதான். அவர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாலை முரசு 05.07.1996-ல்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக ராட்சஸியான ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிப்பதற்காகவே நான் தமிழகத்தில் தங்கியுள்ளேன். ஜெயலலிதாவின் ஆட்யை ஒழிக்க பாடுபட்டவன் நான்தான். நான் சமைத்தேன், அதை கலைஞர் சாப்பிட்டு விட்டார். ஜெயலலிதாவிடம் 2000 கோடி உள்ளது. அதை வைத்து அவர் அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சுலபமாக விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சி செய்வார். ஆனால் நான் அதற்கு விடமாட்டேன். ஜெயலலிதா ஆட்சியை விட்டுப்போனது மட்டுமல்லாமல் ஜெயிலுக்கும் செல்ல வேண்டும். போக வைப்பேன். ஒரு ரூபாய் சம்பளம் வால்கிய ஒருவர் எப்படி இத்தனை கோடிகள் சேர்த்தார்..? ‘சுப்ரமண்யம் சுவாமி ஒரு கொசு’ என்று ஜெயலலிதா சொன்னார். இப்போது சசிகலாவை அந்தக் கொசுதான் கடித்து துன்புறுத்துகின்றன. அது விரைவில் ஜெயலலிதாவையும் கடிக்கும். மாலைமுரசு 12.07.1996-ல்.

ஜெயலலிதாவை விரைவில் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதற்குத்தான் மக்கள் ஓட்டுப்போட்டு கருணாநிதியை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர் நல்லவர் என்பதாலோ, பாசங்கொண்டோ தேர்ந்தெடுக்க வில்லை. ஆகவே கருணாநிதி ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க. ஆட்சியில் இருக்க அருகதை இல்லை. எனவே ஜெயலலிதாவை விரைவில் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். மாலை முரசு 22.07.1996-ல்.

வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா அளித்துள்ள விளக்கம் ஒன்றே போதும், ஜெயலலிதாவை ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறையில் தள்ளலாம். இதற்காக ஆதாரங்களை தேடியலைய வேண்டியதில்லை. மாலை முரசு 24.07.1996-ல்.


ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மௌனம் சாதித்து வருகிறது. எனவே பொது மக்கள் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதோ என்று சந்தேகப் படுகிறார்கள். மாலை முரசு 04.08.1996-ல்.
 
ஆதாரம்; 1996 ஆகஸ்ட் மாத துக்ளக் வார இதழ்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

கொழும்பு - கடந்த நூற்றாண்டு புகைப்படங்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள் என்றால் யாருக்குதான் விருப்பமிருக்காது?! நாம் பிறப்பதற்கு முன்பே நமது நாடும் நகரமும் எப்படி இருந்தது என்ற கேள்விகளை முன்னோரிடம் கேட்டுப்பெற முடியாத தகவல்களை புத்தகங்களும் புகைப்படங்களும்தான் தீர்த்து வைக்கின்றன என்றால் மிகையாகாது. எனக்கு கிடைத்த இலங்கையின் கொழும்பு நகரப் புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.